Monday, April 4, 2011
"முத்தமிழில் அரசியல்."

வரமாகக் குறள்தந்த வள்ளுவரும்

இறைமாட்சி வகுத்தால் போல,

முரசறைந்து, மன்னர்கள் முறைதவறா(து)

ஆட்சிசெய்த முந்தை நாளில்,

அரசுக்கே துணையாக, அறிவார்ந்த

சான்றோரும், அமைச்சும் கொண்டே,

உரமான அவ்வறிஞர் உரைகேட்டுக்,

குடிகாத்தே உயர்ந்தார் நன்றே!



பொற்கொல்லன், கட்டுரைத்த பொய்யுரையால்,

நிலைதிரிந்து, பொற்பின் நல்லாள்,

கற்பரசி, கண்ணகியின் காதலனாம்

கோவலனைக் "கள்வன்" என்றே,

உற்றபடி தேறாத, உரைதீர்ப்பால்,

காவலன்,இன் உயிரும் நீத்தான்.

கொற்றவனும் அரசியளில் குறைசெய்தால்,

அறம்என்றும் கூற்றாம் கண்டீர்!



கன்றிழந்த பசுவுக்காய்க், கோமகனை,

'மனு'வும்தேர்க் காலில் இட்டான்.

தன்னுடலைப் புறவிறகாய்த் தயங்காமல்

'சிபி'என்பான் தராசில் வைத்தான்.

நன்னெறியில் வழுவாது, நடுவுநிலை

தவறாது, நாளும் போற்றும்,

இன்குடிகள் உயிராக, இகல்மன்னன்

உடம்பாக, இசைத்தான் கம்பன்.



தொன்றுதொட்டு வந்தஎங்கள், தூயதமிழ்

அரசியலைத் தொடர்ந்து நோக்கின்,

இன்றிருக்கும் நிலைமையினை, இனிதென்று

சொல்லுதற்கே இடமும் உண்டோ?!

நன்று!நன்று! இவர்செய்யும் நாடகந்தான்

எத்தனையோ? நாட்டை யாள ,

ஒன்றல்ல, நூறல்ல, ஒருகோடிப்

பொய்வரைவார் ஓடும் நீரில் ,


தன்னலமே கருதாத, தலைவருந்தான்

உள்ளனரோ தகவாய்க் காக்க?!

பின்னாளில், இன்னலிலா பெருவாழ்வு

வாழ்தற்கே, பெரிதும் சேர்க்கும்

அன்னாரும்
, ஏழைக்காய் அயராமல்

உழைப்பதுபோல் அனைத்தும் செய்வார்!

பொன்னான அவர்மொழியுள் புரியாத

சூழ்ச்சிகளே புதைந்தி ருக்கும்!



இல்லாத ஏழையவன் , சிலநூறு

()ரூபாய்க்கே இடுவான் வாக்கு!

கல்லாத பாமரனோ, கட்சிபெயர்

ஒன்றேதான் கருத்தில் கொள்வான்!

நல்லவனோ, தேர்தலில் நம்பிக்கை

இழந்தவனாய், நலிந்தே போவான்!

பொல்லாத கயவர்களோ, பொய்முகத்தால்,

"ஆட்சி"எனும் பொறுப்பை ஏற்பார்!



தமிழ்நாடும் உயர்வுபெறத், தமிழினமே

மேன்மையுறத், தமிழும் ஒங்க,

அமிழ்தான வாக்குகளை, அறமுடைய

நல்லவர்க்கே, அளித்தல் வேண்டும்.

உமிபோலப் பெருகிவரும், உன்மத்தப்

பதர்களையே, உதறித் தள்ளி,

இமியளவும் சோராமல், இயன்றவரை

நன்குழைத்தால், இனிக்கும் வாழ்வே!



தன்மக்கள் மேன்மையுற, தாய்மொழியே

உணர்வூட்டும்! தழைக்கும் மாண்பே!

இன்சுற்றம் எத்தனைதான் இருந்தாலும்,

முன்னிற்பாள் ஈன்ற தாயே!

தன்மொழியை மறப்பதனால், தலைமுறையே

மாறிவிடும்! தமிழை, ஆட்சி

மன்றத்தில் அமரத்திடுவீர் ! வளமோடு

வாழ்ந்திடுவீர்! வாழ்க்கை ஓங்கும்!




0 comments: