Monday, April 4, 2011
அலைகள் !

அந்தி நேரம், அலைகட லோரம்,

குந்தி இருந்தேன்; குரலொன்று கேட்டேன்.

ஆர வார அலைகளி லொன்று,

பேர ழகான பெண்ணுருக் கொண்டே,

அழைத்தது,"நான்தான்! அஞ்சேல்!" என்றுநான்

அழைக்கா முன்னமென் அருகில் வந்தது.

கொஞ்சம் அச்சமும், கொஞ்சம் துணிவும்,

நெஞ்சில் உணர்ந்து, நிலைமை தெளிந்து,

"யாரைநீ? உன்பேர் யாதோ?" என்ன,

"பாரைச் சுற்றிய பரவைத் தாயின்

அன்புடை மகள்நான்; 'அலை'என் பெயரே.

என்னுடை மனத்திலே, எண்ணிலா கேள்விகள்,

விடைகள் தேடியே, விழைவுடன் வந்தேன்,

இடையூ றென்றால் இயம்புக" என்றது.

தடையே துமில்லை; தயங்கா துகேள்என,

மடைதிறந் தாற்போல், மலர்வாய் திறந்தது.

"காலங் காலமாய்க் காதலர், நண்பர்,

வேலை தேடுவோர், வீணில் திரிவோர்,

சிறியவர், பெரியவர், சிந்தனை யாளர்,

வறியவர், செல்வர், வன்மை உரைப்போர்,

எத்துணை மானுடர், எத்தனை வேற்றுமை !

அத்துணைச் செய்தியும் அகத்துள் வைத்தேன்.

என்தாய்க் கடலோ, எண்ணிலா வளங்களைத்

தன்னுளே வளர்த்துத் தகவாய்த் தருகிறாள்;

வரம்பு மீறாமல் வாழும் எங்களின்,

உரங்கள் யாவும் உங்களுக் களித்தோம்;

மனிதர் செய்யும் மாசினால், எங்கள்

புனிதம் கெட்டால், பொறுத்தல் கூடுமோ?

மூச்சுத் திணறி முட்டி மோதினேன் :

பேச்சில் ஓர்நாள் பெற்றவள் சொன்னாள்,

'நீண்டு விரிந்த நிலத்திடைச் சென்றுநீ

ஈண்டு வருக,' என்றே; நானும்,

தீண்டியே வந்தேன், திரும்பிப் பார்த்தேன்,

மூண்டதே எம்மேல் முடிவிலா பழியும்,

கால முழுவதும் கருணை பொழிந்தும்,

நீலக் கடலை நிந்தனை செய்தனர்.

ஏனிப் பழியென எனக்குரை செய்யும்.

கூனிக் குறுகும் குற்றமோ எனது?"

அலைமகள் கேட்டாள் ஆதங்க மாக!

"நிலவும் யாதும் நின்பொறுப் பன்று:

கலங்கா திருப்பாய்! கவலை மறப்பாய்!

அலகிலாத் தலைவரின் அறமிது வன்றோ ?!

வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி என்றும்

தான்குறை படுமோ? தாயே! மருகாய்!

'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்த லரிது.' என்றே

மணக்கும் குறளின் மாண்பும் நீயே!

உன்பிழை ஏதும் உலகினில் இல்லை.

உன்பணி தொடர்க! உயிர்கள் தழைக்க!

வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்;

ஆழ்ந்தே தெளிக! அருமை மகளே!"

என்றே நானும் இயம்பக் கேட்டு,

நன்றி சொல்லி, நகர்ந்தது அலையே!

0 comments: