Friday, February 18, 2011

பொங்குகவே!



இயற்கைத்  தாயின்  செல்வங்கள்
என்றும்  யார்க்கும்  பொதுவாகும்!
உயர்ந்தோர்  தாழ்ந்தோர்  அதற்கில்லை!
உழைத்தால்  வாழ்வில்  உயர்ந்திடலாம்!
தயக்கம்  வேண்டாம்  செயலாற்ற,
தமிழா  முந்தி  எழுந்திடுக!
முயன்றால்  சிகரம்  தொட்டிடலாம்!
 
முயற்சி  திருவாய்ப்  பொங்குகவே!

 
கண்ணில்  விரியும்  அழகெல்லாம்,
 
கடவுள்  படைத்த  கொடையாகும்!
 
மண்ணில்காற்றில்நன்னீரில் 
 
மாசைக்  குறைத்தேபயன்துய்க்கும்
 
வண்ணம்  காத்துத்  தலைமுறைக்கும் 
 
வாழும்  உரிமை  தந்திடவே,
 
எண்ணம்  தன்னில்  விழிப்புணர்வை
 
ஏற்றும்  கடமை  பொங்குகவே!

 
அன்னை  பூமி  அருள்செய்ய,
 
அன்பாய்  உழவர்  பயிர்செய்ய,
 
செந்நெல்கமுகுவாழையொடு
 
செழித்தே  விளையும்  பசுமஞ்சள்,
 
கன்னல்தெங்குகனிபலவும்
 
கனிவாய்  உதவும்  இயற்கைக்கே 
 
நன்றி  கூறும்  திருநாளில்,
 
நலமாய்ப்  பொங்கல்  பொங்குகவே!

தையின்  நாளே  தமிழர்க்குத் 
தகவாய்ப்  பிறக்கும்  புத்தாண்டு!
மையார்  மங்கை  மனம்கொண்ட,
மைந்தர்  தாமும்  அகம்மகிழக்
கையும்  கலந்துகாதலுடன்
கனியும்  இன்பம்  கண்டிடவே,
தையும்  பிறந்து  வழிபிறந்து,
தமிழர்  வாழ்வு  பொங்குகவே!

அன்பும்அறனும்  மனம்பொங்க!
அறிவும்திருவும்  மனைபொங்க!
இன்பம்  பொங்கி  இசைபொங்க!
இருப்பார்இல்லா   ஏழைக்கே,
பண்பாய்  உதவும்  நெறிபொங்க!
பல்லோர்  வாழப்  பயன்பொங்க!
நன்மை  பெருகி  வளம்பொங்க!
நாளும்  தருமம்  பொங்குகவே!

ஊரை  ஏய்த்தே  உலையிடுவோர்,
உறவை  ஏய்த்துச்  சுகம்பெறுவோர்,
பேரைப்  பெரிதாய்க்  காட்டிடவே
பிறரைத்  தள்ளி  மிதித்திடுவோர்,
யாரை  எங்கே  கவிழ்த்திடலாம்
என்றே  நாளும்  செயல்படுவோர்
வேரைக்  கிள்ளி  போகிக்கே
விருந்தாய்  வைத்துப்  பொங்குகவே!

எல்லாம்  தருவார்  இலவசமாய்,
என்றும்  தூங்கிக்  களித்திருக்க!
சொல்லும்செயலும்  வகையின்றிச்
சோம்பித்  திரிந்தே  சுகித்திருக்க!
செல்லாக்  காசாய்  மக்களையே,
சேற்றில்  புதைக்கும்  வஞ்சகரின்,
பொல்லா  முகத்தைக்  கிழித்தெறிய,
போதை  தெளிந்து  பொங்குகவே!

சுற்றம்  காத்துநட்பாய்ந்து,
சூழும்  பகையைச்  சேர்ந்தொழுகும்
ஒற்றும்  ஆய்ந்துவிழிப்புடனே,
ஒழுக்கம்  பேணிஉயர்ந்தோராம்
கற்றோர்  போற்றும்  நெறியினிலே,
காலம்  ஓர்ந்தே  உழைப்பதனால்,
அற்றம்  இல்லா  துலகேத்த,
அறிவால்  ஒளிர்ந்து  பொங்குகவே!

அமிழ்தா  னாலும்  பேழைக்குள்,
அடைத்தே  வைத்தால்  பயனாமோ?
திமிர்ந்த  தோளைக்  கொண்டாலும்,
திறனும்  திரிந்தால்  பயனாமோ?
இமியும்  சோரா துழைத்தாலும்,
இலக்கொன்   றின்றேல்  பயனாமோ?
தமிழின்  செம்மை  உலகறியத்
தமிழர்  மாண்பு  பொங்குகவே!

உலகத்  தமிழர்  கைகோர்த்தே
ஒன்றாய்  நின்றால்  உயர்ந்திடலாம்!
கலகம்  செய்தே  குளிர்காயும் 
கயவர்  தமையும்நாட்டினிலே 
உலவும்  குள்ள  நரிகளையும்
உணர்ந்தே  வாழ  வழிகண்டு,
பலரும்  போற்ற  நம்மாற்றல்
பாரில்   உயர்ந்து  பொங்குகவே!

கவிஞா் சரோசா தேவராசு